Powered By Blogger

Thursday, April 1, 2010

வா ழ் க் கை

வாழ்க்கை என்றால் என்ன என்ற தெரிந்துகொள்ள மூன்று இளவரசர்கள் ஞானி ஒருவரைத் தேடிச்சென்றார்கள். அவர்களை நன்கு வரவேற்று அமரச் செய்த ஞானி மூன்று கோப்பைகளில் தேநீர் கொண்டு வந்து வைத்தார்.

ஒன்று தங்கக்கோப்பை, இரண்டாவது வெள்ளிக்கோப்பை, மூன்றாவது களிமண் கோப்பை.

என்ன செய்வது என்று அறியாது திகைத்த இளவரசர்கள் ஞானியிடமே கேட்டார்கள். இப்படி மூன்று விதமாக வைத்தால் நாங்கள் என்ன செய்வோம் எல்லோரும் தங்கக் கோப்பையைத் தானே எடுக்க நினைப்போம். ஏன் இப்படி வைத்தீர்கள் என்று கேட்டனர்.

ஞானி சொன்னார்,
மூன்று கோப்பைகளும் தோற்றத்தில் வெவ்வேறாகத் தெரியலாம். ஆனால் மூன்று கோப்பைகளிலும் உள்ளிருப்பது ஒரே தேநீர்தான்.
அந்த தேநீர் போன்றதே வாழ்க்கை. புறத்தோற்றங்களுக்கு மயங்குவோர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாது தவிக்கிறார்கள் என்று விளக்கமளித்தார்.

எனது வகுப்பில் வாழ்க்கையைப் பற்றி சொல்வதற்காக இந்தக் கதையை மனதில் வைத்துக்கொண்டு, எனது மாணவர்களில் மூவரை எழச்செய்து அவர்களிடம் கேட்டேன்,
எனது வீட்டுக்கு வரும் உங்களுக்கு தங்கம், வெள்ளி, களிமண் என வெவ்வேறு கோப்பைகளில் தேநீர் தந்தால் நீங்கள் எந்தக் கோப்பையை எடுப்பீர்கள் கேட்டேன் இரண்டு மாணவர்களும் நான் முதலில் எடுத்தால் தங்கக் கோப்பையைத் தான் எடுப்பேன் என்றனர். மூன்றாவது மாணவரிடம் கேட்டபோது அவர் சொன்னார்,

ஐயா நான் எந்தக் கோப்பையில் தேநீர் அதிகமாக இருக்கிறதோ அதைத்தான் எடுப்பேன் என்று எதிர்பாராத பதிலைச் சொன்னார். வியந்து போனேன்.

வாழ்க்கையின் உண்மையும் கூட அதுதான். வாழ்க்கைத் தேவைக்கு மட்டுமா செல்வம் சேர்க்கிறோம். நிறைவான செல்வத்தைத் தானே அனைவரும் விரும்புகிறோம்.

----------------------------- -------------- -----------------------


இழந்த நாட்கள்.

ஜகாங்கீர் – இளமையில் ஏறு போல் நடக்கும் இளையவர்கள் வயதானபின்னர் ஏன் கூனிக் குறுகி பூமியைப் பார்த்தவாறு நடக்கிறார்கள்?
நூர்ஜகான் – தாங்கள் இழந்த நாட்கள் பூமியில் எங்காவது புதைந்து கிடக்கிறதா என்று தேடவே அவ்வாறு நடக்கிறார்கள்.!

---------------- ---------------- ------------ ---------



நீரே விழுந்தால் நான் என்ன செய்வேன்?

கம்பரும் சோழ மன்னரும் ஆற்று நீரில் கால் வைத்து நடந்தபோது கம்பர் ஆற்று நீரை அள்ளிக் குடித்தார். அப்போது,

சோழன் – கம்பரே.. என் காலில் விழுந்த நீரைத்தானே நீங்கள் அள்ளிக்குடிக்கிறீர்கள்?
கம்பர் – நீரே என்காலில் விழுந்தால் நான் என்ன செய்வேன் மன்னா?

(கம்பர் நீரே என்று சொன்ன சொல் இருபொருளுடையது. நீரே என்று நிலத்தில் செல்லும் நீரையும் நீரே என்று எதிரே இருக்கும் சோழனையும் குறிப்பதாகப் பொருள் கொள்ள முடியும். கம்பர் சொன்ன எதிர் பாராத பதிலையும் தமிழின் நயத்தையும் எண்ணி மகிழ்ந்தான் சோழன்.)

------------ --------------- --------------- -----------------

அறிஞர் ஆல்டன் குள்ளமானவர். அவரைப் பார்த்து அவருடைய வழக்கறிஞராக இருந்த நண்பர் ஒருவர் சொன்னார்.
“ உங்களை எனது கோட்பாக்கெட்டில் தூக்கி வைத்துக்கொள்ள முடியும்“ என்று.

அதற்கு ஆல்டன் அவரைப் பார்த்து,
” ஓ அப்படியென்றால் உங்கள் தலையைவிட கோட் பாக்கெட்டில் தான் மூளை அதிகமாக இருக்கும்” என்றார்.

No comments:

Post a Comment